“தமிழ் உலகமே இன்று தலைகீழாய் நின்று வருவதற்கு அறியாமையே முதற்காரணம். பெரும்பான்மை மக்கள் அறிவியலின் மார்க்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளாத காரணத்தால் மூட ஒழுக்கங்களாலும்,சாதி சமயக் கெட்ட சடங்குகளாலும் மக்கள் வாடி வதங்குகின்றனர்” - சிங்காரவேலர்.பிறமொழிகளையும் கற்பது என்பது தம்முடைய சிறப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக அல்ல;பிற மொழிகளிலுள்ள அரிய பல கருத்துக்களை,கலை அறிவியலை, தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்துவதுடன்,அச்சீரிய சிந்தனைக் கருத்துக்களைத் தாய்மொழிவழிப் பிறருக்கு எடுத்தியம்புவதற்கும் பயன்படும். அத்துடன், தமது கருத்தைப் பிறமொழியாளரிடம் தயக்கமின்றி அவர்களுக்கு விளங்கும் வண்ணம் எடுத்தியம்பி உரையாடுவதற்கும்,பன்னாட்டு மக்களின் வாழ்க்கைப் பண்பாடு,வரலாறு, பழக்கவழக்கம் போன்றவற்றைச் செவ்வனே அறிந்துகொள்வதற்கும் பன்மொழி அறிவு உற்ற துணையாக அமையும் என்பதையும் சிங்காரவேலர் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.