தேவன், இயற்பெயர் ஆர். மகாதேவன். 1913 செப்டெம்பர் 8 அன்று
திருவிடைமருதூரில் பிறந்தார். பி.ஏ. படித்து, சிறிது காலம் பள்ளி
ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு, 'ஆனந்த விகடன்’ பத்திரிகையில் உதவி
ஆசிரியராகச் சேர்ந்து, தொடர்ந்து இருபத்து மூன்று ஆண்டுகள் விகடன்
நிறுவனத்தில் பணியாற்றினார். 1942 முதல் 1957 வரை 'ஆனந்த விகடன்' நிர்வாக
ஆசிரியராக இருந்தார். சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள்,
நாவல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆர்.எம்.,
அம்பி, விச்சு, காயத்ரி, மயூரம், கேட்டை போன்ற புனைப்பெயர்களிலும் ஏராளமாக
எழுதியுள்ளார். தேவன், ஒரு நாடக ஆசிரியரும்கூட; ஸிம்ஹம் என்ற பெயரில்
வானொலி நாடகங்கள் இயற்றியிருக்கிறார். தேவன், எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக
இருமுறை பதவி வகித்தார். 1957 மே 5 அன்று, தனது 44 - வது வயதில்
காலமானார்.