சேதுபதி (எம்.என்.நம்பியார்) யின் மூன்றாவது மகன் விஜய் (விஜய்). அவர்களுடையது கூட்டுக்குடும்பம். விஜய் தான் நிர்வகிக்கும் கப்பல் நிறுவனத்தின் தொழில் ஒப்பந்தத்திற்காக சுவிட்சர்லாந்து செல்கிறான். அங்கே தொழிலதிபர்களாக இருக்கும் சகோதரர்கள் நாகராஜ் (நிழல்கள் ரவி) மற்றும் சேகர் (ரகுவரன்). இவர்களின் சகோதரி மீனாட்சி (ரம்பா). விஜயும் மீனாட்சியும் காதலிப்பதை அறிந்து அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கும் நாகராஜ், விஜய் சுவிட்சர்லாந்திலேயே தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறான். அதை மறுத்துவிட்டு விஜய் இந்தியா திரும்புகிறான். தன் தவறை உணரும் நாகராஜ், சேகரையும் மீனாட்சியையும் இந்தியாவிற்கு அனுப்பி, விஜய்-மீனாட்சி திருமணத்திற்கு சம்மதிக்கிறான். விஜய் குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதிக்க நிச்சயதார்த்தம் செய்ய முடிவாகிறது. அப்போது நாகராஜ், விஜயின் அக்கா பூஜாவைக் (பானுப்ரியா) காதலித்து ஏமாற்றிய விடயத்தை அறியும் சேகர், அதை பூஜாவிடம் கூறி நாகராஜ் வரும்போது பூஜாவை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்கிறான். இதை தற்செயலாகக் கேட்கும் விஜய் தன் அக்காவைக் காதலித்து ஏமாற்றிய நாகராஜின் தங்கையான மீனாட்சியைத் திருமணம் செய்ய மறுக்கிறான். சேகர் தான் பூஜாவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூற பூஜாவும் அதற்கு சம்மதிக்கிறாள். விஜய் மகிழ்ச்சியடைகிறான். விஜய்-மீனாட்சி திருமணம் இனிதே நடக்கிறது.