நான்மொன்றியலின் மிராபெல் விமான நிலைய விமானத்தினுள் அமர்ந்திருந்து பனி போர்த்திய ஓடுபாதையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆறு மாத காலமாக போலிப் பெயரில் பயணித்துக் கொண்டிருக்கும் நான் புலம்பெயர்ந்தவனாகி நெடுங்காலமாகிறது. உள்நாட்டுப் போரினால் சிதைந்து போன எனது அன்புக்குரிய தாய்நிலமான இலங்கையை விட்டும் வெளியேறி ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. விமானத்திலிருந்து கடைசியாக இறங்கிய பயணியும், குடிவரவு வரிசையில் இறுதியாக இணைந்து கொண்டவனும் நானாகவிருந்தேன். குடிவரவு அதிகாரிகளிடம் நான் எனது சட்டவிரோத கடவுச்சீட்டை ஒப்படைத்து விட்டு, எனது நிஜ அடையாளத்தை அறியத் தந்தால் மாத்திரமே எனக்கு கனடாவில் புகலிடம் கிடைக்குமென நான் லண்டனை விட்டு வெளியேறும் முன்பு, எனது தமிழ் நண்பர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். அதை நுழைவாயிலிலேயே செய்திருக்க வேண்டும். சட்ட விரோத கடவுச் சீட்டுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய பின்னர் புகலிடம் கோரினால் நான் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவேன்.