வேதனையாக இருந்தது எனக்கு சவாரியும் ஒன்றும் கிடைக்கவில்லை. கதை புத்தகங்கள் ஆட்டோவிலேய வைத்திருப்பேன், அதை படிக்க கூட மனம் வரவில்லை, பயம்தான் அதிகமாக இருந்தது. இந்த பிரச்சனை எனக்கு தேவையில்லாதது. ஆனால் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே, இருந்தாலும் நான் அதிகமாக பேசிவிட்டேனோ என்று தோன்றுகிறது. அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அப்படித்தான் பேசியிருப்பார்கள். மேலும் என்னுடைய ஆட்டோவிற்குத்தான் சேதம் அதிகம். எப்படியும் தொட்டால் செலவு 1000 ரூபாயுக்கு மேல் ஆகும், மாத கடைசி வேறு, ஆட்டோ சவாரியும் குறைவாகத்தான் இருக்கும். பத்து நாள் தள்ளி ரிப்பேர் கொள்ளலாம், ஆனால் இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்றுதான் புரியவில்லை. அடிபட்டவன் நான், ஆனால் அடித்தவன் மிரட்டிவிட்டு போகிறான். “இன்னைக்கு சாயங்காலதுக்குள்ள உன் கையை காலை எடுக்கல என் பேரு மாரி இல்ல” என்று என் சட்டையை பிடித்து உலுக்கிவிட்டு எதுவும் பேசாமல் ஆட்டோவை எடுத்துக்
கொண்டு சென்றுவிட்டான்.