எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்களில் இரண்டு வகை உண்டு. இரு வருடப் படிப்பை முடித்த கையோடு நல்ல வலுவான, பிரபலமான நிறுவனமாகப் பார்த்து பணியில் அமர்ந்து கை நிறையச் சம்பளம் பெற்று, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்பவர்கள் ஒரு வகை.
இன்னொரு வகையினர் வாழ்க்கையில் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டவர்கள். மற்றவர்களிடம் கை கட்டி சேவகம் புரிவதைத் தவிர்க்க நினைப்பவர்கள். சேமிப்பை உயர்த்திக் கொள்வதை மட்டுமே லட்சியமாக வைத்துக் கொள்ளாதவர்கள். படிப்பை மூலதனமாக்க் கொண்டு சுய தொழிலில் ஈடுபட்டு, சமூகத்துப் பயன்படும் வகையில் செயல்பட்டு, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர்கள்.
இந்த இரண்டாவது வகை எம்.பி.ஏ. பட்டதாரிகளைப் பற்றி பேசும் சுவையான நூல் 'முயற்சி திருவினையாக்கும்'. தாங்கள் தேர்ந்தெடுத்த சுய தொழில் என்னும் பாதையில் இடையூறுகள் எத்தனை வந்தாலும், எவ்வளவு முறை தடுக்கி விழுந்தாலும், 'தோல்விகளே வெற்றிக்கு முதல் படி' என்பதில் முழு நம்பிக்கை வைத்து முன்னேறியவர்கள்.
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் 25 பேரும் அகமதாபாத் ஐஐஎம்-ல் படித்து பட்டம் பெற்று அத்தனை பேரையும் தனித்தனியாகப் பேட்டி கண்டு, இவர்களுடைய சாதனைக் கதைகளை எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ராஷ்மி பன்சால். இவரும்கூட ஐ.ஐ.எம்.ஏ-வின் முன்னாள் மாணவிதான்!
'Stay Hungry Stay Foolish'' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான இந்த நூலை ஜீவன் கெடாமல் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் ரவிபிரகாஷ்.
இந்த நூலை படித்தால், 'அட, நாமும்கூட தைரியமாக சுய தொழிலில் கால் பதிக்கலாம் போலிருக்கிறதே..' என்ற நம்பிக்கை ஊற்று பிறக்கும்.
-ஆசிரியர்