நம் நாட்டிலுள்ள பலரும் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்குச் செல்கிறார்களோ இல்லையோ உலகின் மறு கோடியிலுள்ள அமெரிக்காவுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் இருக்கிறார்கள். கிராமங்களிலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு படிக்கச் செல்வதுபோல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பலர். தவிர, சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்துகொண்டும், தொழில் நடத்திக் கொண்டும், இன்னும் பலர் அமெரிக்காவிலேயே குடியுரிமை பெற்றும் வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். ‘வாழ்நாளில் ஒரு தடவையாவது அமெரிக்க மண்ணில் கால் பதிக்க வேண்டும்’ என்று எண்ணாதவர் இருக்க முடியாது. அப்படி கால் பதிக்காதவர்களை ஏளனப் புன்னகையுடன் பார்ப்பவர்களும் உண்டு! இப்படி ‘பெருமை’ பெற்ற அமெரிக்காவின் ஆதி வரலாறு, அதன் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்கள், நியூயார்க், கலிஃபோர்னியா, சான்பிரான்ஸிஸ்கோ, லாஸ் வேகாஸ் போன்ற பெரும் நகரங்கள், தீவுகள், விவசாய நிலங்கள் மற்றும் அமெரிக்காவின் மனித இனங்கள், அதைச் சார்ந்த கலாசாரம், பண்பாட்டு, பழக்க வழக்கம் குறித்து, அங்கு வசிப்பவர்களுக்கேகூட ‘அட... இத்தனை விஷயங்கள் இருக்கா!’ என்று வியக்கும் அளவுக்கு சுவையாக, விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேங்கடம். தான் பார்த்த ஒவ்வோர் இடமும், தனக்கு எவ்வாறான உணர்வை ஏற்படுத்தியதோ அந்த உணர்வு குறையாமலும், கொஞ்சம்கூட மிகையில்லாமலும், ரசனையோடு தந்திருக்கிறார் வேங்கடம். வீட்டில் இருந்தபடியே இந்தப் புத்தகத்துக்குள் பயணிக்கும் வாசகர்களுக்கு, அமெரிக்காவில் தங்க வேட்டை ஆடும் உணர்வை ஏற்படுத்தும்!