மருத்துவ ஞானி
பார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காத்து. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.
இந்தியாவின் தென்கோடி கிராமத்தில் பிறந்த வெங்கடசாமி என்ற சிறுவனின் உள்ளத்தில் பதிந்த இந்த அவல நிலை, மருத்துவ உலகில்புகுந்து ஏழை எளிய மக்களுக்கு புத்தொளி காட்டவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. 'இந்த உலகில் ஒருவர்கூட கண் பார்வை இல்லாமல் இருக்கக்கூடாது' என்பதை ஒரு லட்சியமாக கொண்டு ஓடி ஓடி உழைக்க ஆரம்பித்தார் டாக்ட் வெங்கடசாமி.
கிராமத்து இளைஞராக, கல்லூரி மாணவராக, ராணுவ மருத்துவராக, அரசு மருத்துவமனையின் லட்சிய மருத்துவராக, இருளில் வாழ்ந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கண்களுக்கு அறுவைசிகிச்சை மூலம் புத்தொளி கொடுத்த மக்கள்நல சேவகராக வாழ்ந்து மறைந்த டாக்டர் வெங்கசாமியின் வாழ்க்கை வலாற்றை நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் மு. சிவலிங்கம்.
டாக்டர் வெங்கடசாமியின் உறவினர்களையும், அவரிடம் படித்து முன்னேறிய மாணவர்களையும் சந்திந்து அரிய தகவல்களைத் திரட்டியிருக்கிறார். ஒரு குருவாக, வழிகாட்டியாக, உடன்பிறந்த சொந்தமாக, தெய்விகத் தன்மை நிறைந்தவராக பல்வேறு கோணங்களில் இவர்கள் அனைவருமே போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.
அரவிந்த் கண் மருத்துவமனையை நிறுவி, கிராமங்கள் தோறும் இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி, மருத்துவ உலகுக்கே புதிய விடியலாக அமைந்த இந்த மருத்துவ ஞானியின் வாழ்க்கை, சமுதாய மறுமலர்ச்சித் திட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்களுக்கு உந்துசக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
-ஆசிரியர்