இந்நூல் இக்காலத்தின் கட்டாயம். மாவட்ட அளவில் நீதிமன்ற மொழியாகத் தமிழ்தான் இருக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துப் பல ஆண்டுகள் ஆனாலும், அஃது இன்னும் முழுமையாகச் செயற்படவில்லை என்ற கருத்து மறுக்கமுடியாத கருத்தாகத்தான் இருந்து வருகிறது. அதன் காரணம் என்ன? அரசு காட்டுகின்ற ஆர்வத்தின் அளவு சம்பந்தப்பட்ட துறையினர் காண்பிக்கவில்லை என்று சொல்லப்படுகிறதே! இஃது உண்மையா? என்னைப் பொறுத்தவரையிலே, இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண ஒரே வழி. ''சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்'' என்ற முறையில் சம்பந்தப்பட்ட துறையினர் தமிழில் தான் பேசுவது, தமிழில் தான் வாதிடுவது, தமிழில் தான் தீர்ப்பளிப்பது என்ற ஆர்வத்தோடு அதைச் செயற்படுத்த ஆரம்பித்தால் அரசின் உத்தரவும், அதன் அடிப்படையில் அமைந்துள்ள நோக்கமும் நிறைவேறும்.