இற்றைக்கு நூறு ஆண்டுகளின்முன் தமிழ்ப் புலவர் அகராதி என்னும் நூல் ஒன்று செய்வதற்குரிய முயற்சி செய்யப்படுவதாயிற்று. ஏறக்குறைய நூறாண்டுகளின் முன் இலங்கையில் வாழ்ந்த சைமன் காசிச் செட்டி என்பார் தமிழ்ப் புலவர் வரலாறுகளைத் திரட்டி ஆங்கிலத்தில் எழுதி அகர வரிசைப்படுத்தித் தமிழ்ப் புலவர் (Tamil Plutrach) என்னும் தலைப்புடன் 1859இல் வெளியிட்டார். ஆணல் என்பார் சைமன் காசிச் செட்டி அவர்களின் நூலை மொழி பெயர்த்தும் பிற்காலத்துப் புலவர்கள் வரலாறு சிலவற்றைச் சேர்த்தும் பாவலர் சரித்திர தீபகம் என்னும் தமிழ்ப்புலவர் அகரவரிசை நூலொன்றை 1886இல் வெளியிட்டார். இந்நூல்களையும் வீராச்சாமிச் செட்டியார் எழுதிய விநோத ரசமஞ்சரியையும் பின்பற்றிப் புலவர் வரலாறுகளைக் காலந்தோறும் பலர் எழுதி வருவாராயினர். சபாபதி நாவலர் செய்த திராவிடப் பிரகாசிகை, ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை செய்த தென்மொழி வரலாறு, தஞ்சை கே.எஸ். சீனிவாச பிள்ளை எழுதிய தமிழ் வரலாறு போன்ற நூல்களிலும் தமிழ்ப் புலவர் வரலாறுகள் ஓரளவு காணப்படுகின்றன. எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் இயன்றவரை தமிழ்ப் புலவர் வரலாறுகளைத் திரட்டி ஆங்கிலத்தில் எழுதித் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் பெயருடன் வெளியிட்டார். இதன்மேல் பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலை வெளியிட்டனர். இந்நூல்களில் புலவர் வரலாறுகள் அங்கு மிங்குமாகக் கூறப்பட்டுள்ளனவேயன்றி, அவர் வரலாறுகளை அகர வரிசையாக எளிதில் நோக்கி அறியக்கூடிய வாய்ப்புக் காணப்படவில்லை. இதுவரை அச்சிடப்பட்ட தமிழ்ப் புலவர் வரலாறுகளையும், சென்னை அரசாங்க நூல் நிலையக் கையெழுத்துப் பிரதிகள் சரசுவதிமகால் நூல் நிலையக் கையெழுத்துப் பிரதிகள் சம்பந்தமாக வெளிவந்த குறிப்புகளையும். வேறு நூல்களையும் துணைக்கொண்டு தமிழ்ப் புலவர் அகராதி எனும் இந்நூலைத் தொகுத்தெழுதலானோம்.