நான்கு தலைமுறை வாசகர்களின் அன்புக்குரிய எழுத்தாளரும் குற்றப் புதினங்களின் மன்னர் என்றழைக்கப்படும் ராஜேஷ்குமார் இப்பொழுது ஐந்தாவது தலைமுறை வாசகர்களையும் தன்னுடைய நாவல்கள் மூலம் ஈர்த்து, வாசிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். அச்சிதழ்கள் வாயிலாக இவருடைய படைப்புகள் வெளியாகி உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் விரும்பிப் படிக்க காரணம் இவருடைய நாவல்களில் அறிவியலும், குற்றவியலும் ஒன்றாக சங்கமித்து சம்பவங்கள் மின்னல் வேகத்தில் நகர்வதுதான்.
இப்போது இவரது படைப்புகள் காலத்தை வென்று மின்புத்தகங்களாகவும், ஒலிப்புத்தகங்களாகவும் வாசகர்களுக்கு விருந்து படைக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளாக இவர் 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார். அதுதவிர, அறிவியல் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள், சமூக மற்றும் ஆன்மிக புதினங்களையும், 'என்னை நான் சந்தித்தேன்' என்கிற பெயரில் தன் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை சுயசரிதமாகவும் எழுதியுள்ளார். இவரது சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்து உள்ளது. அரசின் கலைக்கான உயரிய விருதான கலைமாமணி விருது 2010ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.