வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; சட்டம் இயற்றி; சமூக சிந்தனையில் ஆழ்ந்து; விஞ்ஞானம், கணிதம், இலக்கியம், வான சாத்திரம் என்று விரிந்து... ஆழ்ந்து, அகன்ற இந்த சமுத்திரத்தை அதன் கரையோரத்தில் நின்று பார்த்தவருக்கு ஏற்பட்ட பிரமிப்பை, அவர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிற முயற்சி இது. புராணம் பொய்யென்று இங்கிலீஷ்காரர்கள் சொல்லி நம்முடைய ஹிஸ்டரியை எழுதினார்கள். அதிலே தங்களுக்குப் பிடித்த Divide and Rule கொள்கைக்கு ஸாதகமான ரேஸ் தியரி முதலான அநேக விஷயங்களை ரொம்பவும் நிலையிலிருந்து ஆராய்ச்சி பண்ணினது போலவே காட்டிச் சேர்த்து விட்டார்கள். புராணம் பொய் என்றால் இப்போது இவர்கள் எழுதிய சரித்திரத்திலும் பொய் இருக்கிறது என்று சொல்லி, உள்ளது உள்ளபடியே இந்திய சரித்திரத்தை எழுதுவதற்கு, Reconstruct செய்வதற்கு, முயற்சிகள் நடக்கின்றன. 'புராணத்திலே, இப்போது நாம் பார்க்கிற யதார்த்த நிலவரங்களுக்கு வேறான விஷயங்கள் இருக்கின்றன' என்கிறார்கள். இவை நடக்க முடியாது என்று எப்படிச் சொல்லலாம்? வேத மந்திர சக்தியும், உயர்ந்த தபஸும், யோகானுஷ்டானமும் அப்போது நிறைய இருந்தன. இவையெல்லாம் இருந்தபோது தேவ சக்திகள் எல்லாம் இருந்தன. எல்லா விதமான ஒலி ஒளி அலைகளும் மனுஷ்ய கண்ணுக்குப் புலப்பட்டு விடாது என்று விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். ஸயன்ஸில் நிரூபிக்க முடியாதது எல்லாம் புரளியென்று சொல்லி புராணங்களைத் தள்ளுவது கொஞ்சம் கூட சரியான மனப்பான்மையாகாது. ஆர்க்கியாலஜியோடு, ஜியாலஜியையும், மைதாலஜியையும் சேர்த்துப் பார்த்தால் நம்முடைய பழைய கதைகள் நிஜம்தான் என்றாகி விடும். புராணங்களில் வெறும் கற்பனையும் எங்காவது இருக்கலாம் தான்! பிற்காலத்தவர்கள் இடைச் செருகலாக சிலதை நுழைத்துவிட்டும் இருக்கலாம். ஆனால், எது கற்பனை, எது இடைச் செருகல், எது மூல ரூபம் என்று யார் நிர்ணயிப்பது? அதிலே ஏதாவது கட்டுக்கதை இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். அது நம்முடைய மனசை பகவானிடம் கொண்டுபோய் சாந்தப்படுத்துகிறதா இல்லையா?