ஒரு நிறுவனத்தின் நிதிமேலாளர் படிப்பறிவு, பட்டறிவு, மதிநுட்பம் உடையவராக இருந்தால் நிறுவனம் மேலும் மேலும் வளம் குவிக்கும் நிறுவனமாக உயரும். அத்தகு அனுபவங்களைப் பெறுவதற்குத் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் முதுநிலைத் துணைப் பதிவாளர் இரா. சுப்பராயாலு அவர்கள் 'நிதி மேலாண்மை' என்னும் இந்நூலை உருவாக்கித் தந்துள்ளார்.
மனித அறிவு வளத்தைப் பயன்படுத்திச் செல்வத்தைப் பெருக்குவது, பாதுகாப்பது, வணிகத்தில் பணத்தைச் கழல வைப்பது இவற்றையெல்லாம் நிதிமேலாளர் கருத்தில் கொள்ளவேண்டும். தொழில் முனைவோர் கையில்தான் நாட்டின் வளர்ச்சியும் எதிர்காலமும் இருக்கிறது. தொழில் முனைவோர் ஊக்கம் நிறைந்தவராக இருந்தால் நிதியுதவி பெறுவதில் இடர்ப்பாடு ஏற்படாது.
வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன் புறச்சூழல் பற்றிய அறிவும் அதற்கேற்ப நம் வணிகத்தைச் செலுத்தும் அற்றலும் இருந்தால் வெற்றி உறுதி. நமது நிதியை ஒரேவகையான முதலீட்டில் பணத்தை முழுவதும் செலுத்தாமல் பல்வகையான முதலீடுகளில் பணத்தைச் செலுத்துவதால் ஒன்றில் இழப்பு ஏற்பட்டாலும் மற்றொன்றில் பாதுகாப்பு இருக்கும். முதலாக்கம் மிகையாகவும் குறைவாகவும் இல்லாமல் தேவைக்கேற்ப அமைந்தால் நிறுமத்தின் ஈட்டும் திறன் செம்மையாக அமையும்.