அது ஆங்கிலேயே காலனியாட்சியை எதிர்த்த காலம். இதன்பொருட்டே ‘இந்திய வீரர்களை பிரிட்டிஷாருக்கு எதிராகச் செயல்பட வைத்தார்’ என்று கத்தார் புரட்சிகர கட்சியின் தலைவர் சர்தார் சிங் சராபா கைதுசெய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. 16-11-1915 அன்று தூக்குமேடை ஏறிய சராபா, “எனது தேசத்தை சுதந்திர மண்ணாகப் பார்க்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். நான் ஒன்றை மட்டுமே விரும்புகிறேன். அது, எம் தேசத்தின் சுதந்திரம். எனக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கை, எத்தனைமுறை அமைந்தாலும், அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் சுதந்திரத்துக்காக தியாகம் செய்வேன்” என்று முழங்கியபடியே தூக்குக்கயிற்றை முத்தமிடுகிறார். அப்போது அவருக்கு வயது 20. இம்மாவீரனின் முழக்கம், ஓர் சிறுவனை உலுக்குகிறது. ‘வாழ்ந்தால் இவர் போல வாழ வேண்டும். மடிந்தால் இவர் போலவே நாட்டுக்காக மடிய வேண்டும்’ என்று, அன்று சூளுரை எடுத்த அச்சிறுவனே, பின்னாளில் நாட்டுக்காக தன்னையே தியாகம் செய்து, தனது 23-வது வயதில் தூக்குக்கயிற்றை முத்தமிட்டான். அன்றைய ஆங்கிலேயே ஆட்சி அவனுக்கு சூட்டிய பெயர் ‘தீவிரவாதி’. ஆனால் வரலாறு அவனுக்கு சூட்டியப் பெயர் ‘மாவீரன் பகத்சிங்’.