வீடு, குடும்பம், குழந்தைகள், உறவுகள் என பம்பரமாக
சுற்றிச் சுழலும் இன்றைய பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாகவே
இருக்கின்றனர். இன்றைய வாழ்வியல் முறை, முற்றிலும் பெண்களை இயந்திர கதியில்
இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. தன் உடல் நலம் குறித்த எந்தக் கவலையும்
படாமல், ஓய்வு என்பதையே மறந்து செயல்படுகின்றனர். சின்ன சின்ன உடல்
உபாதைகளையும் அலட்சியப்படுத்துவதன் விளைவு, ஒரு கட்டத்தில் பூதாகாரமாக
வெடித்து, நாற்பது வயதுக்குள் நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்க வேண்டிய
நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள். பெண்களுக்கென்றே பிரத்யேகமாக இருக்கும் சில
பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு சொல்கிறது இந்த நூல்.
மெனோபாஸ் காலத்தில் பெண்களின் மன நிலையில் ஏற்படும் மாற்றம், பதற்றம்
ஆகியவற்றை எப்படி சரிசெய்வது, டீன் ஏஜ் பிள்ளைகளை, பெற்றோர்கள் எவ்வாறு
நடத்த வேண்டும் என அனைத்து வயது பெண்களுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி
வழங்குகிறது இந்த நூல்.
உடல் நலத்துக்கு உணவில் ஆர்கானிக் உணவு வகைகளை சேர்ப்பதுபோல், பெண்களின்
அழகுக்கு மேலும் அழகு சேர்க்க பக்க விளைவுகள் இல்லாத எளிய ஆர்கானிக்
முறையில் முகம், சருமத்தை பாதுகாக்கவும் பணிக்குச் செல்லும் கர்ப்பிணிகள்
எவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் மகளிரின்
அனைத்து வகை நோய்களுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வுகளையும் ஏராளமான
டிப்ஸ்களையும் தந்து, பெண்களின் நலனைப் போற்றி பாதுகாக்க இந்த நூல்
பேருதவியாக இருக்கும்.
டாக்டர் விகடனில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து வெளியாகும் ‘கலங்காதிரு
பெண்ணே!’ என்ற இந்த நூலைப் புரட்டுங்கள்... உங்கள் ஆரோக்கியமும் அழகும்
மிளிரும்.