சமூக நீரோட்டத்தை மடைமாற்றம் செய்யவல்ல சக்தி மிக்க சாதனை ஆயுதங்கள் இரண்டு. அவை சொல்லும் எழுத்துமே ஆகும்.
விண்ணளாவப் பறக்கும் வில்லம்புபோல் சிந்தனை நாணிலிருந்து பாயவல்லது சொல்லம்பு. நெம்புகோலாக நின்று ஆட்சி மலைகளையும் அசைக்கவல்லது எழுதுகோல், எழுத்தும் சொல்லும் நிகழ்த்திய சமுதாய மாற்றங்களைப் பற்றிய சரித்திரங்கள் நிறைய உண்டு. அவ்விரு ஆற்றல்களும் ஒருவரிடம் அமைவது அரிது. நாவினிக்க பேசுகின்ற நற்றமிழ்ச் சொல்லாளர்கள் பலரின் பேனாமையில் விளக்கெண்ணெய் கசியும். குற்றாலத் தேனருவியாக வற்றாத கருத்துக்களை ஏட்டில் வடிக்கும் எழுத்து பிரம்மாக்கள் பலரின் மேடைப் பேச்சு முகாரிராகம். தேனிலே குழைத்த சொல்லைச் சித்திரமாய் தீட்டி வைக்கும் செஞ்சொல்வாணர். வாழ்க்கைச் சமுத்திரத்தில் ஞானப்படகைத் தன் பேனாத் துடுப்பால் துழாவிச் செலுத்தும் எழுத்து மாலுமி. மெய்ஞானத்தை விஞ்ஞான விழிகொண்டு நோக்கவிழையும் ஆய்வரசர். அதேபோல், விஞ்ஞானத்திற்குள்ளே உட்செறிந்த மெய்ஞானத்தின் மேன்மையை எடுத்தியம்பி அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் அறிவாளர். இவரது கருத்தாக்கத்தில் கன்னலின் இனிமையும் இருக்கும். கனலின் தணலும் இருக்கும். காரணம் இவரது மரபணுவில் நிறைந்து நிற்கும் நுண்மான் நுழைபலமும் எதிலும் எப்போழுதும் எப்பொருளுலும் மெய்ப்பொருள் காணும் பேரறிவுமேயாகும்.
தொகுப்பாசிரியர். துரை அங்குசாமி.