உலகிலுள்ள அனைத்துத் தத்துவங்களையும் அவற்றின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கிறோம். உலகின் மூல முதற்பொருள் ஜடம், பொருள் அப்பொருளினின்றே அனைத்தும் தோன்றின என்ற கண்ணோட்டம் பொருள் முதல்வாதம் ஆகும். இந்தியத் தத்துவங்களில் இப்போக்கை, பூதவாதம், உலகாயதம், சாருவாகம், பிரஹஸ்பதீயம், சடகாரணவாதம் என்று அழைப்பர். ஐம்பூதச் சேர்க்கையும், செயல்பாடுமே உலக இயக்கம் என்பது பூதவாதம். இதுவே உலக மக்களின் கொள்கை என்பதால் , இதனை உலகாயதம் என்றழைத்தனர். உலகோர் தத்துவம் என்று இதனைக் குறிப்பிட்டனர். இது முரணற்ற பொருள்முதல்வாத தத்துவமாகும்.