பன்னெடுங்காலமாக தமிழ் மொழியானது தனது பழைய தடத்திலேயே பயணித்து வந்தது. உலகின் நவீன போக்கிற்கு ஏற்ப அது நவீனமயமாதற்கு தமிழக சமூகக் கட்டமைப்பில் இடமில்லாத நிலையில் அதை சாத்தியப்படுத்தியவர்கள் ஐரோப்பியர்களே. அதில் ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவ இறைநெறி பரப்புனர்கள் தமது ஆய்வு ஆர்வத்திற்காகவும், மதம் பரப்பும் பணிக்காகவும் தமிழை தொழில்நுட்ப அடிப்படையில் நவீனப்படுத்தினர். அச்சு இயந்திரங்களின் அறிமுகத்தால் எல்லா நிலைகளிலும் உள்ள மக்களுக்கும் நூல்கள் சென்றடைந்து, கல்வியை எல்லோரும் பெற வழி அமைத்தனர். இது தமிழியல் வரலாற்றின் திருப்பு முனை மட்டுமல்ல ஒரு மாபெரும் புரட்சி. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையின் அடிப்படை சுவடுகளை முனைவர் சுபாஷிணி அவர்களின் ஆய்வுகள் அடிப்படை மற்றும் முதன்மை தரவுகளுடன் முன்வைக்கின்றது.