இந்து தமிழ் திசையின் இணைப்பிதழான மாயா பஜாரில் 'இடம் பொருள் மனிதர் விலங்கு' என்னும் தலைப்பில் நான் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, வாழ்க்கை, அறிவியல், கதை, உயிரினங்கள் என்று இளம் வாசகர்களுக்கு ஒரு வண்ணமயமான உலகை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றாலும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் வரவேற்பு நம்பமுடியாததாக இருக்கிறது.
ஒவ்வொரு புதனன்றும் கட்டுரை வெளிவந்த சில மணி நேரங்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து, குறிப்பாக மாணவர்களிடமிருந்து உற்சாகமான மின்னஞ்சல் கடிதங்கள் வர ஆரம்பித்துவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் சி. மகேந்திரன் என்று தொடங்கி பலரும் இந்தக் கட்டுரைகள் குறித்து உரையாடினர், ஊக்குவித்தனர். பல நண்பர்கள் வாரம் தவறாமல் அழைத்து அன்றைய கட்டுரை குறித்து விவாதித்தனர், ஆலோசனைகள் அளித்தனர். இதையெல்லாம் சாத்தியப்படுத்தியவர் மாயா பஜார் பொறுப்பாசிரியர் சுஜாதா. இடம் பொருள் மனிதர் விலங்கு நூலாக்கம் பெறும் இத்தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.