நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.
உண்ணாமல், உறங்காமல், சமயங்களில் உயிரையும் பணயம் வைத்து விஞ்ஞானிகள் இந்த
மருத்துகளைக் கண்டு பிடிக்காமல் போயிருந்தால் நாம் இன்று இல்லை. மருந்துகள்
மட்டுமல்ல, நவீன பரிசோதனை முறைகள், சிகிச்சைமுறைகள், மருத்துவக் கருவிகள்
என்று மருத்துவ உலகம் இன்று அதிசயிக்கத்தக்க முறையில்
நவீனமடைந்திருப்பதற்குப் பின்னால் முகம் அறியாத பல விஞ்ஞானிகள்
இருக்கின்றனர். அந்த விஞ்ஞானிகளை நினைவுகூர்வதும் கொண்டாடுவதும் நம் கடமை.
இதுவரை நாம் அறிந்திராத மாபெரும் சாதனையாளர்களை இந்நூல் நமக்கு
எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகம் செய்கிறது. சில முக்கியமான மருந்துகள்
எவ்வாறு கண்டுபிடிக்கப் பட்டன, எத்தகைய மனித ஆற்றலும் அசாத்திய உழைப்பும்
அதற்குத் தேவைப்பட்டன என்பதை டாக்டர் கு. கணேசன் விவரிக்கும்போது
விஞ்ஞானிகள் மீதும் மருத்துவர்கள் மீதும் நம் வியப்பும் மரியாதையும் பல
மடங்கு அதிகரிக்கின்றன. பொதுநல மருத்துவரும் புகழ்பெற்ற மருத்துவ அறிவியல்
எழுத்தாளருமான டாக்டர் கு. கணேசனின் இந்நூல் நம் விழிகளைக் கடந்து
இதயத்தைத் தொடுகிறது.