இன்றைய வேகமான வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி குறைவு, மன அழுத்தம் போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரம் இவை குறித்து விழிப்புணர்வு இருந்தால், இதயத்துக்குப் பாதுகாப்பு கொடுத்துவிடலாம்; இதய ஆரோக்கியத்தைக் காப்பாற்றிவிடலாம் என்பதுதான் நிதர்சனம். ஆஞ்சைனா என்னும் நெஞ்சுவலி, மாரடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற இதய பாதிப்புகள் பெரும்பாலும் திடீர் தாக்குதலாக வந்தாலும், அவை ஒரே நாளில் உருவாவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே உருவாகி ஒரு சமயத்தில் மொத்தமாக அச்சுறுத்துகின்றன. அதற்கு முன்பு சில அறிகுறிகளை அவை காட்டுகின்றன. நம்மில் பலருக்கும் இதயநலம் தொடர்பான விழிப்புணர்வு அவ்வளவாக இல்லாத காரணத்தால், அந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிடுகிறோம். பிறகு அவதிப்படுகிறோம். அதேநேரம், நாம் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோமானால், உயிராபத்திலிருந்து தப்பித்துவிடவும் முடியும்.