ஆரோக்யத்துடன் வாழ மனிதன் ஆசைப்படுகிறான். நோயற்ற நிலையில் கிடைக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கு நிகராக ஏதுமில்லை என்றே கூறலாம். ஏனெனில் உடல் உபாதை இல்லாத மனிதனுக்குத்தான் உயர் சிந்தனைகளில் மனம் லயிக்கும். உபாதை தோன்றிவிட்டால் அதை சரி செய்து கொள்ள அவன்படும் பிரயத்னங்களில்தான் மனம் ஈடுபடுகிறது. ஆரோக்யம் மறுபடியும் திரும்பிவிட்டால் மனம் சாந்த நிலைக்குத் திரும்பிவிடுகிறது. சரகசம்ஹிதை எனம் ஆயுர்வேத நூலில் நோயற்ற வாழ்விற்கான குறிப்புகள் காணப்படுகின்றன."உடலுக்கும் மனதிற்கும் ஒத்துக்கொள்ளும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், நிதானித்துச் செயலாற்றுபவன், பொறிகளால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பிறருக்கு உதவுபவன், ஸமபாவனை கொண்டவன், உண்மையில் ஈடுபாடுள்ளவன், பொறுமை உள்ளவன், உண்மையான இதத்தைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான்" என்று குறிப்பிடுகிறார்.