மகாத்மாவும் மகாகவியும் 1919இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர்
முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர். காந்தியின்
செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி, கட்டுரை, கவிதை,
கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவுசெய்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே பாரதியின் முயற்சிகளை அறிந்திருந்த
காந்தி, பாரதி மறைவிற்குப் பிந்தைய காலகட்டத்தில் ‘யங் இந்தியா’, ‘நவஜீவன்’
இதழ்களில் பாரதியைப் பற்றி எழுதியிருக்கின்றார்; பாரதி பாடல்களின்
மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார். பாரதி பெயரைத் தம் கைப்படத்
தமிழில் எழுதிப் போற்றியிருக்கிறார். இந்த வரலாற்றை விரிவாகத் தமிழ்ச்
சமூகத்தின் கவனத்திற்குக் கையளிக்கின்றது இந்நூல்.