அலெக்சாண்டரை மாவீரன் என்று உலகு கொண்டாடியதற்குக் காரணம் அவரின் தொடர் வெற்றி மட்டுமல்ல; அவரது மதிநுட்ப போர்த்திறனும் கூடத்தான்.
காய்ச்சிய இரும்பை அடிக்கும் கொற்கொல்லனின் திறனாகத்தான் எதிரியின் வலிமையை வளைப்பவர் அலெக்சாண்டர்.
அலெக்சாண்டரிடமிருந்து ஈகைப் பண்பும் காருண்யமும் அவருக்குக் கவர்ச்சியளித்தது என்றே கூறலாம்.
நட்புக்கு மனக் கொடுத்துவரும் ஆசனம் கடைசியில் தான் அமர்ந்திருக்கும் ஆசனத்திற்கே ஒருநாள் கேடாக வந்து அமையும் என்ற கவலையும் பயமும் அலெக்சாண்டருக்கு அவருடைய தாய் ஒலிம்பியாஸ் எழுதிய கடிதங்களில் ஓயாது வெளிப்படும்.
அலெக்சாண்டர் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் கொடுக்கும் தியாக மனப்பான்மை உள்ளவராகவே ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தார்.
வீரத்தை எப்போதும் மதிக்கும் மாவீரனாக இருந்தார் அலெக்சாண்டர். இந்திய மண்ணின் மாவீரன் போரஸ் உடனான யுத்தகள இறுதியில், “போரஸ் மன்னரே! தோல்வி உங்களிடம் தோற்றுவிட்டது. நான் வெற்றி பெற்று விட்டேனா என்கிற சந்தேகம் இன்னும் என்னுள் இருக்கிறது. உங்களுடன் நட்பு கொள்ளவே நான் விரும்புகிறேன்” என்று தன்னடக்கத்துடன் போரஸின் மாவீரத்துக்கு மதிப்பளித்தவர் அலெக்சாண்டர்.
மாவீரன் அலெக்சாண்டரின் வரலாற்றை ஒரு பன்முகத் தன்மையுடன் விரிவாகவும் சுவாரசியத்துடனும் எழுதியுள்ள நூலாசிரியர் ஜெகதா அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது என்பதை வாசகர்கள் நன்கு உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
எஸ்.எஸ். ஷாஜஹான்