உயரிய பரிசு!
மருத்துவத்துறையிலும் அரிய சாதனை புரிந்தவர்களை உலக அளவில் அங்கீகரிக்கும் பரிசுதான் நோபல் பரிசு. மனிதர்களின் இன்றைய ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிட்ட பல ஆராய்ச்சியாளர்களைக் கண்டுபிடித்து கவுரவப்படுத்தியுள்ளது இந்த உயரிய பரிசு.
1901 முதல் 1950 வரை மருத்துத் துறையில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகளின் வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்களது ஆய்வுகளையும் தொகுத்து, 'நோபல் வெற்றியாளர்கள் - பாகம் 3' என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக, இந்த நான்காம் பாகத்தில், 1951 முதல் 2000 வரை நடந்த மருத்துவ ஆராய்ச்சிகளையும், அதற்கு அடிப்படையாக விளங்கிய சுவாரசியமான நிகழ்வுகளையும், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்த அத்தனை கண்டுபிடிப்பாளர்களைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
உடலின் செல்களில் உள்ள இருபெரும் சுவாச சுழற்சிகளைக் கண்டுபிடித்தல், தானாக உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைக் கண்டறிதல், உடலிலுள்ள என்ஸைம்களில் மரபணுக்களின் ஆளுமை மற்றும் வைரஸ்களின் மாற்றங்கள் பற்றிய ஆய்வு, தொற்றுநோய்களின் துவக்கம், அது பரவும் விதம் பற்றிய நிரூபணம், ரத்தத்தில் காணப்படும் கொழுப்புச் சத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வு.. இது போன்ற கண்டுபிடிப்புகளின் பின்னணியை ரசனையோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் கே.என். ஸ்ரீனிவாஸ்.
மருத்துவத்துறையின் முற்பதிவுகளைத் தெரிந்துகொள்ள விழைவோர், ஆர்வத்தோடு படித்துத் தெரிந்துகொள்ள உதவும் நூல் இது.
-ஆசிரியர்