தமிழின் முதன்மை நூல் தொல்காப்பியம். தொல்காப்பியப் பொருளதிகாரத்தை ஆழமாகப் படிக்கும்போது தமிழிலக்கிய வகைகள், வடிவங்கள் பற்றி அறிகிறோம். தமிழிலக்கியம் தொல்காப்பிய காலத்திற்கு முன்பே பெருநிலை பெற்றிருந்ததை உணர்கிறோம். தமிழிலக்கியம் தொண்ணூற்று ஆறு வகைப் பிரபந்தங்களையுடையது எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆயின், இவற்றின் வகை தொகைகளை ஆராயுமிடத்து முந்நூற்றிற்கும் மேற்பட்ட இலக்கிய வகைகள் பல்கிப் பெருகியிருப்பது புலனாகின்றது.