இந்தத் தொகுப்பில் மொத்தம் 36 கதைகள் இடம் பெற்றுள்ளன. இதில் முக்கியமான ஒரு செய்தியை நான் சொல்லியே ஆக வேண்டும். இத்தொகுப்பில் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பெண் எழுத்தாளர்களும் சரிசமமாக இடம் பெற்று இருக்கிறார்கள், குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஆ. தனுசியா என்கின்ற மாணவியின் கதையும் இடம்பெற்று இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இது எத்தனைப் பெரிய சமூகமாற்றம். எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இது சாத்தியம் என்றும், இதுதான் பெரிய வளர்ச்சி என்றும் நான் கருதுகிறேன். பெண் எழுத்தாளர்கள் அதிகமாக இருக்கின்ற இத்தமிழ்க் கதைகள் தொகுப்பினைப் பார்க்கும்பொழுது மனம் மகிழ்ச்சியில் மத்தளம் கொட்டுகிறது
இக்கதைகள் யாவும் மிக எதார்த்தமான மொழிநடையில் நம் வாழ்வின் பல பாகங்களை நமக்கு நினைவூட்டி செல்கின்றன. ஒவ்வொரு கதைகளும் இதை வாசிப்பவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நேரத்தில் சம்பவங்களாகப் பார்க்கப்பட்டோ, கேட்கப்பட்டோ அல்லது அவர்கள் வாழ்விலேயே நடந்தவைகளாகவோ இருக்கக்கூடும் என்று எண்ணும் அளவிற்கு எதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. இதுதான் இக்கதாசிரியர்களின், எழுத்தாளர்களின் வெற்றியாக நான் கொண்டாடுகிறேன். ஒவ்வொரு கதையும் தனித்திறனோடு ஒவ்வொரு மலர்மணங்களாக, வெவ்வேறு கனிச்சுவையாகத் தனிச்சுவையோடு மிளிர்கின்றன. கதைகளே காலத்தின் கண்ணாடி, இக்காலத்திற்கும் முக்காலத்திற்கும் முன்னோடி.