ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எண்ணங்கள் தான் செயல்பாடுகளின் அஸ்திவாரம். நம் மூளையில் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பைதான் நாம் மனம் என்கிறோம். மனத்தின் கட்டளைப்படியே கண் முதலான ஐம்புலன்களும், கை, கால்களும் தத்தம் கடமைகளைச் செய்கின்றன.அதாவது மூளை கருவி என்றால் மனம் அதன் இயக்கம் ஆகும். பொறிகளுக்கு தனியே அறிவுமில்லை, ஆற்றலும் இல்லை, பொருளுமில்லை. பொறிகளைப் பொருள்வழி இயக்க வல்லது மனமே. நல்ல நடத்தை என்பது மனதுக்கு அலங்காரம் மட்டுமல்ல, நல்ல மனிதனுக்கு அடையாளம். அன்பையும், பொறுமையையும் போற்றி வந்த மனம் இன்று வெறுப்பையும் கொடுமையையும் கொட்டும் இடமாகி விட்டது. பொறாமையாலும், பொச்சரிப்பாலும் மனித மனதில் சூழும் இருள் மற்றவர்களையும் துன்பத்திற்குள்ளாக்கும்.