ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை அப்பா தயாரித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட். ஆனாலும் பாடல் எழுத குறைவான வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருந்தன.
‘தெனாலிராமன்’ படத்தின்போது அப்பாவுக்கும், சிவாஜிக்கும் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, சிவாஜியின் படங்களுக்கு அப்பா பாடல் எழுதவில்லை.‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று சிவாஜி சொல்லவில்லை. ஆனால் பிரச்சினையைப் பற்றி தெரிந்ததால், தயாரிப்பாளர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என்று அழைக்காமல் இருந்துவிட்டார்கள்.
அதே சமயம், அப்பா பாடல்களை விட வசனம் தான் அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மிகமிக பிஸியாக பாடல்கள் எழுதிக்கொண்டு இருந்தார்.
அவரிடம் ‘பாகப்பிரிவினை’ படத்திற்கான பாடல்களை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் இரண்டு பாடல்களை எழுதித் தந்தார்.
மூன்றாவது பாடல் வேண்டும் என்று கேட்டபோது, “நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் எழுத வேண்டும். நிச்சயம் அதற்கு இரண்டு வாரங்கள் ஆகிவிடும். நீங்கள் அவசரம் என்று கேட்கிறீர்கள். ஆகவே இந்தப் பாடலை கண்ணதாசனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் அவரிடம் பேசுகிறேன்” என்றார்.