கன்னித்தமிழ்
காலந்தோறும் கடப்பாடுடையவர்களால் சீராகவும் செம்மையாகவும் வளர்க்கப்பட்டு
வந்துள்ளது. மூலங்காண முடியாத முத்தமிழ் நதியில் காலந்தோறும் வந்து கலந்த
நதிகள், மூல நதியிலிருந்து பிரிந்த நதிகள் எனப் பல வண்ணங்களில்
பாகுபடுத்திக் காட்டலாம். அந்த வகையில் பல்வேறு தமிழறிஞர்கள்
தாய்த்தமிழுக்குத் தம்மால் இயன்ற மொழித் தொண்டுகளைப் புரிந்துள்ளனர்.
இராமநாதபுரம் கண்ட சேதுபதி மரபினர் கன்னித் தமிழுக்குக்
கரையிலாப் பல தமிழ்த் தொண்டுகள் புரிந்துள்ளனர். எனினும் தமிழ்க்
கலைத்துறையில் காட்டிய பெரும் புலமையும், புலமையாளரிடம் காட்டிய பேராதரவும்
நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. இவ்வகையில் மிகவும் புகழ்பெற்று
விளங்கியவர் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவரான பாண்டித்துரை தேவர் ஆவார்.
அவருடைய தந்தையார் திரு. பொன்னுசாமித் தேவர். தந்தையென்றும் மகன் என்றும்
பிரித்தறிய முடியாவண்ணம் தமிழ்ப்பணியில் கலந்துள்ளனர். அப்பெரு மக்களின்
தமிழ்த் தொண்டினை விளக்குவதே செந்தமிழ் வளர்த்த தேவர்கள் என்னும்
இந்நூலாகும்.
இந்நூலை எழுதியவர் தமிழ்ப்புலமைமிக்குடைய தமிழ்ப்
பேராசிரியர் மு. இராகவையங்கார் ஆவார். அவருடைய அரிய உழைப்பும், ஆய்வும்,
மொழிப் புலமையும் இந்நூற்கு அணிகளாக உள்ளன.