ஐரோப்பியர் வருகைக்குப்பின் தமிழ்மொழியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
புதினம், சிறுகதை, உரைநடை, ஆய்வு நிலைகளில் பல புதிய மின்னல்கள் பாய்ந்தன.
அதனால் தமிழில் அழகு ஒளிர, பல வண்ணங்களில் அது கிளைத்துச் செழித்தது.
கிறித்தவ இலக்கியங்களும், இலக்கணங்களும், உரைநூல்களும், சிறுகதைகளும்
தமிழில் தோன்றி வளர்ந்தன. கிறித்தவ சமயத்தைப் பரப்ப வந்த கிறித்தவ
பாதிரியார்களுள் ஒருவரான கான்ஸ்டன்டைன் பெங்கி என்பவர் தமிழகம் வந்து தமிழ்
மக்களுடன் கலந்து தமிழ்மொழியைக் கற்று தம் சமயத்தைப் பரப்பி வந்தார்.
தமிழ் முனிவராக தமது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தமிழ்மக்கள் உள்ளத்தில் இடம்
பிடித்தார். தைரிய நாதசாமி என்று தமது பெயரை மாற்றிக்கொண்டார். பின்னர்
அதுவே வீரமா முனிவர் என ஆனது.
தமிழைக் கற்று தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு
வந்தார். அகராதி முறையைத் திருத்தியமைத்தார். தேம்பாவணி என்னும்
காப்பியத்தையும் பல சிற்றிலக்கியங் களையும் படைத்தார். கதை வளர்ச்சிக்குக்
கால்கோள் செய்தார். அவர் எழுதிய சிற்றிலக்கியங்களுள் ஒன்றே திருக்காவலூர்க்
கலம்பகம் என்பது. சோழ நாட்டின் காவிரிக் கொள்ளிடத்தின் வடகரையில்
அமைந்துள்ள திருக்காவலூர் என்னும் திருத்தலத்தில் அருள்பொழியும், அடைக்கல
அன்னை என்னும் கன்னி மரியாளின் அருட்சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில்
எழுதப்பட்டிருப்பதே இந்நூல்.