கதைகள் சொல்வதும், கேட்பதும், படிப்பதும் மனித வாழ்வியல் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. எண்ணற்ற கதைகள் தாங்கிய வண்ணம் வார, மாத இதழ்கள் நமது வாசல் கதவைத் தட்டும் காலமிது. நமது கண்களில் தென்படும் கதைகளைப் படித்துப் பார்த்தால். அவைகளில் பெரும்பாலானவை பரபரப்புக்கும் பொழுது போக்குக்கும் உரியனவாக இருப்பதை நாம் காணலாம். கற்பனைக் கதைகளுக்கு மாறாக, வாழ்க்கையில் உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து எழுதப்படும் கதைகள் நமது சிந்தனையை மேலும் செழுமையாக்க உதவும். இப்படிப்பட்ட கதைகளே மக்கள் மனதில் தங்கி, நீண்ட காலம் வாழ முடியும்.
இத்தகைய கதைகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் ' பங்கீடு ' என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் உள்ளவை கதைகள் என்ற போதிலும், உண்மை நிகழ்ச்சிகள் கதைவடிவில் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. மாற்றார் நலனும், மனித நேயமும் பேணுதல் என்ற கருத்து, இக்கதைகளில் இழையோடி நிற்பதைக் காணலாம். ஜனசக்தி பத்திரிகையின் துணை ஆசிரியர் எம்.ஏ. பழனியப்பன் இக்கதைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். எங்களது நூல்களுக்கு என்றும் ஆதரவும் ஒத்துழைப்பும் தரும் வாசகர்கள் இந்நூலுக்கும் அதனை அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.