தந்தை பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகை இதழ்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை குறிப்பாக திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம் ஆகும். அந்தப் பத்திரிகையில் வெளியான பெரியாரின் தலையங்கங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், அறிக்கைகள் முதலியவற்றை காலவரிசைப்படி தொடர்ந்து, புத்தகமாகப் பிரசுரிக்கும் பெரும் பணியை திராவிடக் கழகத்தலைவர் கி. வீரமணி மேற்கொண்டுள்ளார். இப்போது 1949ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான கட்டுரைகள் அடங்கிய 41ம் தொகுதியும், 1949 ஜுன் முதல் நவம்பர் வரையுள்ள 42ம் தொகுதியும் வெளிவந்துள்ளன. இதில் 42ம் தொகுதி முக்கியமான ஒன்றாகும். பெரியார் மணியம்மை திருமணம் 1949ஆம் ஆண்டு ஜுலை 9ந் தேதி சென்னையில் திருமண ரிஜிஸ்திரார் முன்னிலையில் நடந்தது. இதன் காரணமாக, அண்ணா தலைமையில் திராவிட கழக்ததினரில் ஒரு பகுதியினர் தனியாகப் பிரிந்து தி.மு.கழகத்தைத் தொடங்கினர். திருமண முடிவுக்கு தான் வர நேரிட்ட காரணங்கள் பற்றி பெரியார் எழுதிய கட்டுரைகளும், அறிக்கைகளும் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தன்னைக் கொலை செய்வதற்கு சதி நடந்ததாகவும் பெரியார் கூறுகிறார். நல்ல கட்டமைப்புடன் இப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசியல் வாதிகள், தமிழ்நாட்டின் வரலாற்றை அறிய விரும்புவோர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்.