தமிழகம் என்று அறியப்படும் நிலப்பகுதிக்கு தொன்மையான வரலாறு இருப்பதை அறிகிறோம். இந்த நிலப்பகுதியில் வாழ்ந்த/வாழும் மனிதர்களுடன் தொடர்புடைய கலைக்கு நீண்ட வரலாறு இருப்பதை உணர்கிறோம். இக்கலை வரலாறுகளைச் செப்பமாகப் பதிவு செய்ய வேண்டும். அந்த நோக்கத்தில் 'சித்திரமாடம்' எனும் இந்நூல் அமைகிறது. கூத்து மரபு, இசை மரபு ஆகியவை குறித்த விரிவான பதிவுகள் தமிழில் இருப்பதாகக் கருத இயலவில்லை. இப்பின்புலத்தில், சிற்ப-ஓவிய மரபின் ஒரு பிரிவான சுவரோவியங்கள் குறித்த உரையாடலாக இந்நூல் அமைகிறது. சுவரோவியங்கள் தமிழ்ச்சூழலில் உருவான வரலாறு. இடம்பெற்றுள்ள இடங்கள், அவற்றின் தன்மைகள் ஆகியவை தொடர்பான விவரணங்களின் அடிப்படையில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஓவிய ஆய்வு முறைமை மற்றும் பாதுகாப்பு குறித்த செய்திகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ்க்கலை வரலாற்றியலுக்கு இந்நூல் புதிய வருகை.