'சவேரா ஓட்டல்' சக்ரவர்த்தியின் வேண்டுகோளை ஏற்று அவரின் குடும்ப விழாவில் பங்கேற்கக் காரில் சென்னையில் இருந்து கிளம்பினேன். என்னுடன் கார்ட்டூனிஸ்ட் மதன், முதுபெரும் இதழாளர்களான ராவ், கிருஷ்ணன் பாலா ஆகியோரும் வந்திருந்தனர். வழியில் ஒரு பீடா கடை அருகே காரை நிறுத்துமாறு மதன் கேட்டுக்கொண்டார். காரை நிறுத்திய டிரைவரிடம், “பீடா கடையில் குட்கா பாக்கெட்டுகள் வாங்கி வாருங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரின் கைக்கு குட்கா வந்து சேர்ந்தது. அப்போது நான் மதனை நோக்கி, "நீங்கள் இப்போது சாப்பிடப் போவது வேண்டுமானால் குட்காவாக இருக்கலாம் ஆனால் அது உடம்புக்கு பேட்கா" என்றேன். இந்த கமண்ட் கேட்டதும் மதன் உட்பட அனைவரும் அனுபவித்து ரசித்துச் சிரித்தனர். அப்போது மதன் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். "எப்போது பேசினாலும் ஏதேனும் ஒரு சிலேடைச் சுவையோடு துணுக்குகளை உதிர்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். இவற்றை நாங்கள் மட்டும் ரசித்தால் போதுமா? குறித்து வையுங்கள். பின் தொகுத்து எழுதுங்கள். வாசகர்களுக்கு அதுவே விருந்தாகி விடும்"என்று மதன் என்னிடம் கேட்டுக் கொண்டார். அவரின் வழி காட்டுதலையடுத்து நான் அவ்வப்போது உதிர்க்கும் சிலேடைச் சுவைகளே நூல் வடிவம் பெற்றுள்ளன. இந்நூல் அச்சாகி வெளிவரும் போது 'குட்கா'வுக்குத் தமிழக அரசு தடை விதித்து இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்நூல் உருவாக்கக் காரணமாக இருந்த பாரதி புத்தகாலயம் நாகராஜன் உட்பட அனைவருக்கும் நன்றி.