பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. இவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் விநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது வார்த்தைகளும், கதையின் மாந்தர்களும் உலகைப் பழிவாங்கத் துடிக்கும் நீதியின் முதற்குழந்தைகள். கைவிடப்பட்டும், கொல்லப்பட்டும் அநீதியான முறையில் நிர்வாணமாக்கப்பட்ட நந்திக்கடல் மனிதர்களே இந்த நூற்றாண்டைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இனிவருகிற எல்லா நூற்றாண்டிலும் நீதியின் பிராணவாயுவாக தமிழீழர்களே எழுச்சி கொள்ளப்போகிறார்கள். அவர்களின் இலக்கியங்களே உலகைப் பேரலையாகத் தாக்கப் போகிறது. அந்தப் பேரலையின் ரகசியச் சுழிப்பும், அதிர்வுமே எனது கதைகள்.