தினமலரில் வெளிவந்த வெற்றிகரமான தொடரின் நூலாக்கம். இதைவிட எளிமையாகவும்
இனிமையாகவும் இலக்கணம் கற்றுத்தரும் இன்னொரு புத்தகத்தைக் காண்பது அரிது.
சரளமாக நல்ல தமிழில் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு.
ஆனால் எழுத அமர்ந்தால் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நம்மை
ஆட்கொண்டுவிடுகின்றன. கோர்வையாக எழுதவேண்டுமா அல்லது கோவையாகவா? அரிவாள்,
அறிவாள் எது சரி? இலக்கணம் என்றாலே பதட்டம் ஏற்பட்டுவிடுகிறதே, அது ஏன்?
உண்மையில் அது பதட்டமா அல்லது பதற்றமா? எழுத, எழுத பூதம்போல் கேள்விகள்
கிளம்பிக்கொண்டே இருக்கின்றன. வேலை தேடவேண்டுமா அல்லது வேலைத் தேடவேண்டுமா?
நல்ல விஷயங்களைக் கடைபிடிக்கவேண்டுமா கடைப்பிடிக்கவேண்டுமா? எட்டுப்
பந்துகள் சரியாம்; ஏழுப் பந்துகள் தவறாம். இது ஏன்? காபிக்குத் தமிழில்
என்ன? முதலாளி, தொழிலாளி, உழைப்பாளி ஆகியவற்றில் வரும் 'ஆளி' எதைக்
குறிக்கிறது? நள்ளிரவு என்று சொல்கிறோம்; அதில் 'நள்' என்பது என்ன? பாலுடன்
குடம் சேரும்போது ஏன் பாற்குடம் தோன்றுகிறது? என். சொக்கனின் இந்தப்
புத்தகம் உங்களிடம் இருந்தால் உங்களுக்குத் தோன்றும் எல்லாக் குழப்பங்களும்
சந்தேகங்களும் மின்னல் வேகத்தில் மறைந்துபோகும். தமிழ் இலக்கணத்தையும்
தமிழ் இலக்கியத்தையும் நீங்கள் தேடித்தேடி வாசிக்கவும் நேசிக்கவும்
ஆரம்பிப்பீர்கள். உங்கள் சிந்தனை வண்ணமயமாகப் பூத்துக்குலுங்கும். நீங்கள்
எழுதும் தமிழ் அழகாகும். உங்கள் தன்னம்பிக்கை மலைபோல் உயரும்.இந்தப்
புத்தகத்தில் உள்ள 100 கட்டுரைகளும் தினமலர் இதழில் தொடராக வெளிவந்து
மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.