நாட்டுப்புறவியல் சார்பான நூல்களையே அதிகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது கவனம் எல்லாம் நாட்டுப்புறவியலின் பக்கமே, திரும்பி விட்டது. சிறுகதைகளோ, கவிதைகளோ எழுத மனசு வரவில்லை. மீண்டும் மீண்டும் நாட்டுப்புறவியல் சார்ந்த தரவுகளைச் சேகரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறேன். இத்தகைய சூழலில், நாட்டுப்புறவியல் சாராத சில கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலைக் கொண்டு வருகிறேன் என்றாலும் கதைகளில் நாட்டுப்புறத்து நம்பிக்கைகள்; நாட்டுப்புறவியலுக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு போன்ற நாட்டுப்புறவியல் சார்ந்த சில கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைப் பூக்களை ஒன்று சேர்த்து ஒரு கதம்ப மாலையாக, இந்நூலை உருவாக்கி இருக்கின்றேன்.