“கம்பனைப் பயிலும்போதெல்லாம் அவன் கவிதைத் திறன் மட்டுமின்றி அவனுடைய அரவியல், சமூகக் கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அந்தக் கருத்துக்கள் அவன் காலவுணர்வுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்காமல், அவனுக்குப் பின்னால் எத்தனையோ நூற்றாண்டுக் காலம் கடந்து தோன்றிய புதிய முற்போக்குக் கருத்துக்களோடு ஒத்திருந்ததே என் வியப்புக்குக் காரணம். அவனுடைய அரசியல் கருத்துக்களையெல்லாம் தொகுத்து ஆராய வேண்டும் என்ற ஆசை எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. எப்போதும் பல்வேறு பணிகளின் நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் என்னால் இந்த ஆசையை நிறைவேற்ற முடிந்ததில்லை. இந்நிலையில் 1990ஆம் ஆண்டுக்கான அமரர் ஏவி.எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு ஆற்றும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும் இந்த ஆசையை நிறைவேற்றத் துணிந்தேன். அதன் விளைவே இந்நூல்.
கம்பன் தன் பாடுபொருளாகத் தேர்ந்த இராமாயணக் கதை அரசியல் நிகழ்ச்சிகளையே ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. அவன் இந்நிகழ்ச்சிகளைக் கையாளும் முறையிலிருந்து அவன் இவற்றைத் திறனாய்வுப் பார்வையில் அணுகியிருக்கிறான் என்று தெரிகிறது. கதையில் வரும் கோசலம், கிட்கிந்தை, இலங்கை ஆகிய மூன்று முடியாட்சிகளிலும் அவன் குறைகளைக் காண்கிறான். இவ்வகையில் அவன் ஓர் அரசியல் கோட்பாட்டாளனாகச் செயல்படுகிறான். அதே நேரத்தில் ஓர் அரசியல் தத்துவஞானியாகவும் நின்று ஓர் இலட்சிய அரசு எப்படி இருக்க வேண்டும் என்றும் அவன் விளக்குகிறான். இக்கருத்துக்கள் எல்லாம் கம்பனுக்கு என்று தனித்தோர் அரசியல் கோட்பாடு இருப்பதை உணர்த்துகின்றன. அக்கோட்பாட்டை இனம் காண்பதே இந்நூலின் நோக்கமாகும்” என்று இந்நூலின் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இந்நூலைப் பற்றி தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.