நற்பண்புகளின் நாற்றங்கால்
சிறுவர்களுக்கு சாப்பாடு ஊட்டி விடும்போதும், அவர்களைத் தூங்க வைக்கும்போதும் நம் பெரியோர்கள் கையாண்ட யுக்தி, கதை சொல்வதுதான்.
கதை சொல்வது ஒரு அற்புதமான கலை. கற்பனை வளத்தோடும், கேட்பவர்களுகு மேலும் மேலும் ரசனையைத் தூண்டும்படியாகவும் சுவாரசியமாக கதை சொல்ல ஒரு தனித்திறமை வேண்டும். சிறுவர்களின் உள்ளம், நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமோ அதை உடனே உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. ஆகவே, பொழுதுபோக்குக்காக மட்டுமே சொல்லப்படுவதாக இருந்தாலும் அந்தக் கதைகள், நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும் அவர்களின் உள்ளத்தில் விதைக்கும் வகையில் இருக்க வேண்டியது அவசியம்.
நம் பாரம்பரிய வழக்கத்தில் உள்ள பஞ்ச தந்திரக் கதைகள் அப்படிப்பட்டவையே. அவற்றின் கருவை எடுத்துக்கொண்டு வித்தியாசமான சிந்தனையோடு, சிறுவர்களின் மனதையும் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக சுட்டி விகடனில் தொடர்ந்து வெளிவந்த 'நவீன பஞ்ச தந்திரக் கதை'களின் தொகுப்பே இந்த நூல்.
கற்பனையோடு கலந்து, அறிவுப்பூர்வமான விஷயங்களையும் சொல்கிறது இந்த நவீன கதைகள். உதாரணமாக, வாத்துக்கு முட்டையிட மட்டுமே தெரியும்; அடைகாக்கத் தெரியாது, கரடி மாமிசம் உண்ணாது; ஆனால் மீன் மட்டும் சாப்பிடும்... என்பன போன்ற விஷயங்களை சிறுவர்களுக்குத் தெளிவாக உணர்த்தும் விதமாக எழுதியுள்ளார் நூலாசிரியர் இரா. நடராசன்
இந்த நூல், சிறுவர் உள்ளத்தில் நற்பண்புகளை விதைக்கும் நாற்றங்காலாக அமையும்.
-ஆசிரியர்