நீங்காத நினைவுகளின் பதிவு
'சுயசரிதை இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று இந்த நூலைப் படிப்பவர்கள் உணரும்படியாக தன்னடக்கத்தோடு தனது வாழ்க்கையை அழகாக, உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணா ஐயர்.
தன் வாழ்க்கைப் பயணத்தை தாயின் மடியில் இருந்து துவங்கி, அழகான கிராமச் சூழ்நிலைகளின் வர்னணைகளோடு பள்ளி, கல்லூரிகளில் படித்த காலங்களில் தனக்கு கல்வி பயிற்றுவித்தவர்களையும், அவர்கள் கல்வி போதித்த வித்ததையும்கூட வி.ஆர்.கிருஷ்ண ஐயர் பசும பொங்க நினைவு கூர்ந்துள்ளார்.
தன்னுடன் பிறந்தவர்களின் இழப்பும், அன்பால் பிணைக்கப்பட்ட மனைவியின் இழப்பும் எந்த அளவுக்கு தன் மனதைப்பாதித்தது என்பதை விவரித்த விதம் கண்ணில் நீர் கசிய வைக்கும் எழுத்து. இந்திய பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான அனுபவங்களையும், தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலும் ஏற்பட்ட அனுபவங்களையும் மிகவும் நேர்மையாக விவரித்திருக்கிறார்.
ஒரு சிறந்த நீதிபதியாக மட்டுமல்ல எழுத்தாளராகவும், இடதுசாரி சிந்தனைகளோடுகூடிய ஆன்மிக ஆர்வம் கொண்டவராகவும், மக்களின் வாழ்வில் ஆரோக்கியமான மாற்றம் வரவேண்டும் என்ற பொதுநல சிந்தனையாளராகவும் அவர் பரிமளித்ததையும் நாம் உணர முடிகிறது.
ஆங்கிலத்தில் வி.ஆர். கிருஷ்ண ஐயர் எழுதி, பியர்சன் பதிப்பகம் வெளியிட்ட "WANDERING IN MANY WORLDS" என்ற நூலின் தமிழாக்கம்தான் 'பல்வேறு உலகில் என் பயணம்'. இந்த நூலை சுவை குன்றாமல் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் ராணிமைந்தன்.
இந்த நூல், இந்தியாவின் உயர்ந்த அந்தஸ்துக்குரிய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரின் வாழ்க்கைச் சரிதம் மட்டுமல்ல, பொதுநல சிந்தனையும், அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த மனம் கொண்ட மாமனிதரின் நீங்காத நினைவுகளின் பதிவுகள்!