வரலாற்றைப் பிழையற அறிந்துகொள்பவர்களால்தான் பின்னாளில் வரலாற் படைக்கவும், வரலாறாய் வாழவும் முடியும். அந்த எண்ணத்தை இதயத்தில் நிறைத்து, 'உரிமை வீரன் சேதுபதி' எனும் மாவீரனின் வாழ்க்கை வரலாற்றுச்செய்திகளை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ளும் வகையில், சிறுசிறு புனைவுகள் தூவி சிறப்பானதொரு வரலாற்றுப் புனைகதைப் புத்தகத்தைப் படைத்துள்ள நூலாசிரியர் திரு.க.மனோகரன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். பெருமைவாய்ந்த ஒரு பெருவீரனின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை பட்டாடையில் பொன்னிழை பதித்ததுபோல் ஆங்காங்கே சிறுசிறு சொந்தப் புனைவுகளையும் சோர்வுதட்டாமல், நடையோட்டம் தடையுறாமல் நேர்த்தியுறக் கோர்த்து 'உரிமைவீரன் சேதுபதி' எனும் புனைகதைப் புத்தகத்தைப் படைத்துள்ளார் திரு.க.மனோகரன்.