எழுத்தில் செறிந்த அனுபவம் வாய்ந்த ஸ்ரீநிவாஸ் அவர்கள் படைத்துள்ள ‘மகாபலிபுரம் உங்களுடன் வரும் ஒரு வழி காட்டி என்ற நூல் தமிழ், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி பல பதிப்புகள் கண்டுள்ளது.
இவரது ‘காஞ்சிபுரம் -ஒரு தரிசன வழிகாட்டி’ என்னும் நூலும், ‘சுந்தரகாண்டம்’ பாராயண நூலும் வாசகர் இடையே மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளன.
மந்திராலயம் – நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி, மற்றும் கிஷ்கிந்தை – ஹம்பி சுற்றுலா எனும் இந்த நூலில் ஆன்மீக, இதிகாச, சரித்திர கலைச் சிறப்புக்கள் அனைத்தையும் நேரில் கண்டு, அனுபவித்து, அந்தப் பரவச அனுபவத்தைப் பிறரும் அடையும் வகையில், எளிமையான நடையில், சுவாரசியமாக வழங்கியுள்ளார்.
பூஜ்யஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் வரலாறும், அவர் ஜீவ சமாதி கொண்டு அருள்பாலித்து வரும் மந்த்ராலய தரிசனமும்!
கர்நாடக மாநில கிராமமான ஆனேகுந்தியை ஒட்டி துங்கபத்ரா நதியின் மையத்தில், ஒரு தீவுத் திட்டில் அமைந்துள்ள, நவ பிருந்தாவனம் என்று வழங்கப்படும், 9 மகான்களின் புனிதமான சமாதிக் கோயில்கள் தரிசனம்.
இராமன், இளவல் இலட்சுமணனுடன் சீதையைத் தேடி வந்த போது சுக்ரீவன், ஆஞ்சநேயன் ஆகியோருடன் நட்பு பூண்ட கிஷ்கிந்தை, ஆனேகுந்தியை ஒட்டி அமைந்துள்ளது.
இராமாயணத்தின் பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறிய கிஷ்கிந்தையை வலம் வந்து இராமாயண காலத்துக்கே சென்று வரலாம் வாருங்கள்.
கட்டிட மற்றும் சிற்பக்கலைச் சிறப்புகளுக்காக பெரும் புகழ் பெற்ற, விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரான “ஹம்பி” துங்கபத்ராவின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்தச் நகரத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும், கண்ணீரில் நனைந்த அதன் வரலாற்றையும் ஹம்பியைச் சுற்றி வந்து அறிந்து கொள்வோம், வாருங்கள்!