ஒரு பெண்ணைக் கண்டு விரும்பிய ஆணின் ஆழமான காதல் உணர்வுகளைக் கற்பனை என்னும் தேரில் ஏற்றி கவிதைகளாக வலம்வரம்வரச் செய்துள்ள நூலே '' இதய தாகம் ''.
ஒரு ஆணின் இதயம் தான் விரும்பிய பெண்ணின் அன்பைப் பெற எப்படி ஏங்கித் தவிக்கிறது என்பதை அழகிய எளிய கவிதைகளால் படம் பிடித்துக் காட்டியுள்ளார் கவிஞர். தமிழ்ப் பற்று மிக்க இக் கவிஞர், பல கவிதைகளில் பாரதி, கம்பராமாயணம், மகாபாரதம் என் இலக்கிய மணத்தையும் கமழச் செய்துள்ளார். வில்லாற்றலில் வல்லவன் என அர்ஜீனனுக்குப் பட்டம் தந்த மகாபாரதம், வில்லின்றி விழியம்பால் வீழ்த்தும் திறனுடைய உனக்கு என்ன பட்டம் தர போகிறது இந்தப் பாரதம்? என்று காதலியை நோக்கி வினா எழுப்புகிறார், ஒரு கவிதையில். தாமரை பூக்கும் தடாகத்திற்குத் தன் காதலி சென்றால், அவளைத் தேசியப் பெண்ணாக்கி விடுவார்கள் என்கிறார் ஒரு கவிதையில். காதலியைப் பலமுறை நிலவென்று கூறி இருப்பதால் தான் அவள் எட்டாத தூரத்திலேயே உள்ளதாக ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்.