கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிறந்து 18-03-1848 அன்று. அதனைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிறப்புச் சான்றிதழ் என்று கூறுவர். பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் மார்க்சும், ஏங்கெல்சும் 1848ஆம் ஆண்டுக்கு முன் வரைந்திருந்தாலும் கம்யூனிசம் ஒரு செயல் திட்டமாகவும் அதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டதாகவும், ஒரு பேரீயகத்தினை உலகம் தழுவ உந்திச் செலுத்துவதான ஓர் இலட்சிய ஆவண மாகவும் திகழ்வது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே. மார்க்ஸ் மெய்யியல், பொருளாதாரம், சமூகம் பற்றிய கருத்துக்களை இதற்கு முன்னால் பல்வேறு கட்டுரைகளில் கூறியுள்ளார். பொருளாதார வரலாற்று நூல் என்று அறிஞர் உலகால் பாராட்டப்பட்ட “பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் வாழ்க்கை நிலைமைகளின் வரலாறு” என்னும் நூலில் முதலாளித்துவ தொழிற்கூட முறை (Factory Ststem) உருவாக்கிய பல்வேறு கொடுமைகளை ஏங்கெல்ஸ் எடுத்துக்காட்டியுள்ளார். மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து படைத்த “ஜெர்மன் சித்தாந்தம்” என்னும் நூலில் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்தை தந்துள்ளனர். எனினும் எல்லாவற்றையும் சாரமாகப் பிழிந்து உலகத் தொழிலாளி வர்க்கத்தின் கடமையை, பொறுப்பைத் தெளிவாக அப்புரட்சி வர்க்கத்திற்கு வழிகாட்டியாக, செயல்திட்டமாக ஊக்குவிக்கும் விசையாக அமைந்தது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே.