கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் வழியை நானே கண்டு பிடித்தேன்.
ஒருமுறை, ஈரோட்டில் பாழடைந்த, "பார்க்' மாதிரியான ஓரிடத்தில் பொது கூட்டம். முன் வரிசையில், இரண்டு, மூன்று தோழர்கள்; அவ்வளவு தான் கூட்டம். மேடைக்கு முன்னே வெறிச்சோடிக் கிடந்தது மைதானம். சுற்றும், முற்றும் பார்த்துக் கொண்டேன். முயன்றால் பொதுக் கூட்டம் கூடக் கூடிய இடம் தான்.
இரண்டு, மூன்று பேரோடு கூட்டம் துவங்கியது; நான் பேசத் துவங்கினேன்...
"டேய்... யார்றா இங்கே இன்ஸ்பெக்டர்?' என்றேன் பெருங்குரலில். என் அவை வணக்கம் இது தான்.
இந்த இடத்தில் பொதுக் கூட்டம் என, எங்கள் தோழர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே, போலீஸ் அனுமதி வாங்கியிருக்கின்றனரா, இல்லையா? ஒரு வாரத்துக்கு முன்பே அனுமதி கொடுத்த போலீசாரர்கள் எங்கே? மாமூல் தண்டலில் இறங்கி விட்டீர்களா? பாதுகாப்பிற்கு ஏன் வரவில்லை? லாரியும், வாகனங்களும் கூட்டத்திற்குள் புகுந்து போய் கொண்டிருக்கிறதே!
கூட்டத்தில் திரண்டுள்ள எங்கள் மக்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு? யாராவது ஒரு தோழனின் காலில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டாலும், ஒரு லாரியோ, பஸ்சோ, இந்த வட்டாரத்திலேயே ஓடாது. யார் கொளுத்துவர் என கேட்கிறாயா, போலீஸ்காரா? பேச்சை நிறுத்திவிட்டு, தெருவில் இறங்கிக் கொளுத்துவேன் என்று, உரத்துக் கூவினேன்.