இரண்டு செய்திகளையும் என் மனது இணைத்துப் பார்த்தது. அதன் விளைவுதான் மாதங்கியும், சியாமும்! இந்தக் கதையால் இந்தியா முழுவதும், சீர்படப் போவதில்லை, அல்லது முடியாது! அது பேராசை! நம் மகாத்மா காந்தியின் குரலே இன்னும் நம் இளைஞர்களின் மனதிலும், காதிலும் எட்டவில்லையே! காசில் மட்டுமே, ரூபாய் நோட்டுகளில் மட்டுமே அவரைக் கண்ணால் பார்க்கின்றனர்! பல சமயம் கருத்தில் கூட எட்டுவதில்லை! அவரது கொள்கைகள், உபதேசம், அவர்கள் மனதில் உறைக்கவில்லை! ஆனால் ஒரே ஒரு ஆத்மா, படித்த, பண்புள்ள ஓர் அறிவு ஜீவி ! ஒரு பெண்ணை, இது போன்ற கொடுமை களிலிருந்து மீட்டாலும் போதும்! என் ஆத்மா சாந்தி அடைந்து விடும்! பெண்ணுரிமைக்கு உறுதுணையாய், நல்ல நாவல்களை வெளியிடுவதும், பெண்களுக்குச் செய்யும் உதவிதான்! பெண்களின் மன வலிமையைக் கூட்டுவது தான்! பல காலமாக அந்த அரிய தொண்டைச் செய்து வரும் அருணன் ஐயா அவர்களுக்கு நன்றியும், அன்பும் கலந்த வணக்கங்கள்!