இந்தியத் தத்துவ ஞான மரபை வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மேலை நாடுகளுக்குப் பரப்பிய பெருந்தகையோர் பலர் இந்த தேசத்தில் இருந்துள்ளனர்.
சுவாமி விவேகானந்தர், சுவாமி ராமதீர்த்தர், பரமஹம்ஸ யோகானந்தர் என எத்தனையோ மகான்கள் இங்கிருந்து மேலைநாடுகளுக்குச் சென்று இந்தியத் தத்துவ போதனைகளைச் செய்துள்ளனர். அவர்களுக்கு மேலை நாடுகளில் பக்தர்களும் சீடர்களும் இருக்கின்றனர். இந்த மகான்களின் தாக்கத்தால், இந்திய நாட்டுக்கு வந்து இந்த மண்ணில் சில காலம் தங்கிச் செல்ல ஆசை கொண்டு இங்கு வருபவர்கள் பலர். ஆனால், நம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, வெளிநாடுகள் எதற்கும் செல்லாமல், தன் தெய்வீக ஒளியாலும் சிறப்பாலும் மேலைநாட்டினரை இங்கு வரவழைத்து தம் பக்தர்களாக ஆக்கிய சிறப்பு மகரிஷி ரமணருக்கே உரித்தானது.
இந்து மதத்தின் இணையில்லா இறையடியாராக, வேதாந்தத்தின் வேந்தனாக, கருணைக்கடலின் சொரூபமாக, மொத்தத்தில் சத்குருவாக விளங்கிய ரமண மகரிஷியின் வாழ்க்கை இந்த நூலில் அழகுற பதிவு செய்யப்பட்டுள்ளது. ரமணரின் குழந்தைப் பருவ வாழ்க்கை, அவர் தன்னை ஆன்மிகத்தில் இணைத்துக் கொண்டது, திருவண்ணாமலையை இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட காரணம், அங்கு அவரின் தன்நிலை மறந்த தவம், ரமணாசிரமம் உருவான விதம், தியானம் பற்றிய ஆலோசனைகள், அவர் எடுத்துச் சொன்ன ஆன்மிகச் சிந்தனைகள், நல்லொழுக்க நெறிமுறைகள், மனிதநேயத்தைப் பற்றிய மங்காத குறிப்புகள் ஆகியவற்றை இதில் காணலாம்.
அர்த்தம் மிகுந்த கதைகளும் ரமணரின் கருத்துகளும் நம் கருத்தில் பதியும். பகவான் ரமணரின் வாழ்வில் ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களையும் அதனால் அவர் பெற்ற அனுகூலங்களையும் நாம் இந்நூல் மூலம் அறிந்து கொள்ளலாம்.