ஒரு மொழி பேசும் மக்கள் இன்னொரு மொழி பேசும் மக்களோடு
கலக்க நேர்ந்தால், ஒருவர் பேசும் மொழியில் மற்றவர்
மொழிச்சொற்கள் சென்று கலத்தல் இயல்பு. தமிழ்மக்கள் பிறநாடுகளிற் சென்று
வாணிகம் நடத்தினமையானும், அரசரின் கீழ்ப் பல தொழில்கள்
அமர்ந்தமையானும் பிறமொழிச் சொற்கள் தமிழிலும், தமிழ்ச்
சொற்கள் ஆரியம் எபிரேயம் கிரீக் முதலிய மொழிகளி்லும்
புகுந்தன. தமிழ்ச் சொற்கள் பிறமொழிகளில் புகுங்கால்
அம்மொழி இயைபுக் கேற்பத் திரித்து வழங்கப்படும். அப்படியே பிறமொழிச்
சொற்கள் தமிழிற் புகுங்கால் அவை தமிழின் அமைதிக்கேற்பத் திரித்து
வழங்கப்பட்டன. இம்முறையினால் அவை தமிழ்ச் சொற்களோ
அன்றோவெனப் பிரித்தறிவது அரிதாயிருந்தன. பிற்காலங்களில்
இம்முறை கவனிக்கப்படாது விடப்பட்டது. ஆரியச் சொற்கள்
கணக்கின்றித் தமிழுடன் கலக்கப் புகுந்த பிற்காலத்தில், அவை தம்முருவுடனேயே
வழங்கப்படலாயின. அதனால் தமிழின் சுவை பெரிதுங்
குறைவுற்றது. ஒரு பொருளைக் குறிப்பதற்குரிய தமிழ்ச்
சொல்லிருப்ப, அதனைப் பிறமொழிச் சொற்களால் வழங்கத்
தலைப்படுதல் தமிழின் அழிவுக்கு ஏதுவாகும்.