பல கடவுள்கள் பிறப்பதற்கு, நீண்ட நாட்களுக்கு முன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஒருநாள் எழுந்தபோது, என்னுடைய முகமூடிகள் திருட்டுப் போயிருந்ததைக் கண்டேன். என்னுடைய ஏழு பிறப்புகளில் என்னை அலங்கரித்த ஏழு முகமூடிகள் அவை.
‘திருடர்கள், சபிக்கப்பட்ட திருடர்கள்’ என்று கத்திக்கொண்டே தெருவில் இறங்கி ஓடினேன்.
ஆண்களும், பெண்களும் என்னைக் கண்டு சிரித்தனர். சிலர் என்னைக் கண்டு பயந்து வீட்டுக்குள் ஓடினர்.
நான் கடைவீதியை அடைந்தபோது, கூரையில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன், ‘இதோ ஒரு பைத்தியக்காரன்’ என்று என்னைப் பார்த்துக் கத்தினான். அவன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்தபோது, முகமூடியற்ற என் முகத்தை சூரியன், முதல் முறையாக முத்தமிட்டது. என் ஆன்மா ஆழமான காதலில் விழுந்தது. அதுமுதல் எனக்கு முகமூடிகள் தேவைப்படவில்லை. ஆழ்ந்த அமைதியிலிருந்தபடி, ‘திருடர்கள், ஆசிர்வதிக்கப்பட்ட திருடர்கள்’ என்று அழுதேன்.
இப்படித்தான் நான் பைத்தியமானேன்